News
MAY 2025

குரு உபதேசம் 4387
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
சாதுசங்க தொடர்பு என்பது பக்திநெறியினில் அமையலாம், யோகநெறியில் அமையலாம் அல்லது ஏதோ வீண் ஆரவார பூஜைகளையும், ஆடம்பர பூஜைகளையும் கொண்ட சங்க தொடர்பும் அமையலாம். ஆனால் முருகனை வணங்க வணங்கத்தான், உண்மையான பக்தியுடைய, உண்மையான யோகம் அறிந்த, உண்மையான தவம் செய்திட்ட, உண்மையான ஞானம் அறிந்த, உண்மையான முக்தியை அறிந்த, உண்மையான சித்தியை அறிந்த சாதுசங்க தொடர்பை பெறுவார்கள். பக்தி, யோகம், ஞானம், முக்தி, சித்தியென ஞானத்தின் அத்துணைப் படிகட்டுகளையும் அறிந்தவர்களும், முழுமுதற் கடவுள் முருகனை முன்னிறுத்துகின்றவருமான உண்மையான சாதுவை அதாவது சொற்குருநாதனை அடையாளம் கண்டு அவர்தம் திருவடிகளைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற வாய்ப்பையும் பெறுவார்கள்.
அப்படிப்பட்ட சாதுவானவரை எப்படி அடையாளம் காண்பது? என்பதை முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றிட பற்றிட உணர்த்துவான் முருகன்.
உண்மையான சாதுவாகிய சொற்குருவிடம் பொருள்பற்று இருக்காது, வஞ்சனை இருக்காது, கோபம் இருக்காது, காமம் அணுவளவும் இருக்காது, வீண் ஆரவாரம் இருக்காது, தன்னை மறைத்து தலைவனை முன்னிறுத்துவார், முற்றுப்பெற்ற ஞானியர் புகழ் பேசுவார்கள், பலியிடும் தெய்வங்களை வணங்க மாட்டார்கள், சாந்தமானவர்கள், ஆற்றல் மிகுந்தவர்கள், தருமத்தின் வழியை உயிராய் மதிப்பர், பிறர் பொருளை வஞ்சிக்க மாட்டார்கள், பெண்களை தாயாய் மதிப்பார்கள், எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவராய் இருப்பார்கள், எல்லா உயிர்களுக்கும் இரங்கி இதம் புரிந்து தொண்டு செய்கிற தொண்டராய் இருப்பார்கள், பிற உயிர் படுகின்ற துன்பம் கண்டு இரக்கம் கொள்வதோடு பிற உயிர் படும் துன்பத்தை போக்கவல்லவராய் இருப்பார்கள், பாவபுண்ணியங்களை அறிந்தவர்களாய் இருப்பார்கள், முன்ஜென்ம வினைகளை உடைத்தெறிந்து மேலும் வினை சேராது காத்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் உபாயத்தை அறிந்தவராய் இருப்பார்கள். ஆக மனிதனை கடவுளாய் ஆக்குகின்ற தூய நெறியினை உடையோராய், தாம் கடைத்தேறியதோடு தம்மை சார்ந்தவர்களையும் கடைத்தேற்றுகின்ற வல்லமை மிக்கவராய் இருப்பார்கள். அவரே கடைத்தேற்றவல்ல உண்மையான சாது ஆவார்.
இவ்வுலகினிலே அத்தகைய சாதுசங்கம் ஒன்று உண்டெனில் அது முருகப்பெருமானால் அமைக்கப்பட்ட கலியுக மாற்ற ஏழாம் படை வீடான துறையூர் ஓங்காரக்குடில் மட்டுமே எனலாம். குடிலாசான் ஆறுமுக அரங்கமகாதேசிகரே அத்தகு தகுதியுடைய சற்குரு என்பதையும் முருகனை தொடர்ந்து வணங்க வணங்க உணரலாம்.
……………..
கந்தன் கழலை கனிவுடன் போற்றிட
சந்தேகமில்லை தானவனாமே.
