News
OCTOBER 2023

குரு உபதேசம் – 3834
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
அகத்தீசன் ஆசி பெற்று முருகனை இடைவிடாது ஞானிகள் துணையுடன் தளராத திடசித்த வைராக்கியத்துடன் தளராது பூஜைகளும் தானதருமங்களையும் செய்து செய்து மகா புண்ணியவானாகிய சாதகனுக்கு தக்க சந்தர்ப்பத்தில் வினைகள் தீர்ந்து சமநிலை அடையும் காலத்து அவனுள் தோன்றும் முருகப்பெருமான் ஜோதி பிழம்பாக தோன்றி சாதகனின் வாசியோடு வாசியாக கலந்து சாதகனின் தேகத்தினுள் பிரவேசித்து வாசியோகம் நடத்திட துவங்குவான். முருகனது வாசியோகம் துவங்கிட ஞானிகளையெல்லாம் அகத்தியர் தலைமையில் ஒன்று கூடி சாதகனுக்கு பக்கபலமாய் இருந்து சித்தரென பட்டம் பெற்ற சாதகனை வாசி யோகத்தில் வெற்றி பெற உறுதுணையாய் இருந்து வாசி யோகத்தில் வெற்றி பெறச் செய்து கசடுள்ள காமதேகத்தின் மும்மலக் கசடுகளை முற்றிலும் அறுக்க செய்து பெறுதற்கரிய ஒளி தேகத்தை பெற்று தருவார்கள். ஒளி தேகம் பெற்ற சாதகன் அந்நிலையில் தானும் தலைவனும் ஒன்றாகி, தான் வேறு தலைவன் வேறு என்றில்லாமல் அனைத்திலும் நீக்கமற கலந்து மரணமிலாப் பெருவாழ்வை பெற்று இனி பிறவா பெரும்பேற்றை அதாவது முழுமை ஞானத்தை மெய்ஞானத்தை வெற்றி காண்பான். இதுவே முருகனது செயற்கரிய பெருஞ்செயல் என்பதையும் அறியலாம்.
