News
MAY 2025

குரு உபதேசம் 4400
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்….
உடம்பிற்கு ஆக்கமளிப்பது உணவு என்பதும், உயிருக்கு ஆக்கமளிப்பது பக்தியும், புண்ணியமும் என்பதை அறியலாம்.
உடம்பை ஆக்கம் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? உயிரை ஆக்கம் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? என்பதையும் உணர்த்துவான். முருகப்பெருமானை வணங்க வணங்க உடம்பும் தேவைதான் உயிரும் தேவைதான் என்பதையும், தனி உடம்பும் இயங்காது, தனி உயிரும் இயங்காது என்பதையும் அறியலாம்.
உடம்பின் வழியில்தான் உயிர் ஆக்கம் பெறும் என்றும், உயிரினால்தான் உடம்பும் நிலைப்பெறும் என்றும் அறியலாம்.
உடம்பும் உயிரும் இணைந்தால்தான் மீளாப்பிறவியிலிருந்து மீள முடியும் என்பதையும் அறியலாம். அதற்கு தேவையான உடம்பை பெற தாய் தந்தையரால் உண்டாக்கப்பட்ட காமதேகத்தினுள் உள்ள காமக் கசடை நீக்கினால்தான் உயிருடன் இணையவல்ல சுத்த தேகமான ஒளிதேகத்தை பெறமுடியும் என்றும், அந்த ஒளிதேகமே உயிரோடு இரண்டற கலக்கும் வல்லமை பெற்றது என்பதையும் அறியலாம்.
முருகனது அருள் கூடிட கூடிடத்தான் காமதேகத்தினுள் உள்ள கசடான மல அறிவு தெளிவடைந்து சிறுக சிறுக மெய்யறிவு பெறும். மெய்யறிவு பெற பெற உடம்பைப் பற்றிய இரகசியங்கள் முருகனருளால் நம்மால் உணர முடியும்.
ஆதலின் உடம்பினை பக்குவப்படுத்த ஒரு சிறப்பான வேதியியலுக்கு உட்படுத்திட ஏதுவான உணவின் முறைமைகள், மூலிகை வர்க்கங்கள், யோக சாதனங்கள், பயிற்சிகள் என பலவிதமான கூறுகளையும் எல்லாம்வல்ல முருகப்பெருமான் சாதகனது வாசியோடு வாசியாக கலந்து காமக்குற்றமுள்ள தேகத்தினுள் பிரவேசித்து சாதகனது தேகத்தை சார்ந்து அவனை வாசிவசப்பட செய்து உடம்பை சிறுக சிறுக ஒரு சிறப்பான, நுட்பமான வேதியியலினால் மாற்றித் தருவான்.
அப்படி மாற்றிட அச்சாதகன் ஏராளமான புண்ணியபலமும், பூர்வ ஜென்ம புண்ணிய பலமும் முருகனது திருவடி பற்றி ஜென்மஜென்மமாக தொடர்ந்து செய்திட்ட பூஜை பலனினால் உண்டான அருள்பலமும் கூடி நின்றால்தான் உடலினுள் உள்ள உயிரைப் பற்றி நிற்கின்ற, மும்மலக் கசடை நீக்க முடியும்.
ஆதலினால் எந்த அளவிற்கு முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி மனமுருகி “நாயினும் கடையேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எமக்கு அருள்செய்வாய் முருகா” என தினம் தினம் தவறாமல் வேண்டுகோள் வைத்து உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தவறாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ முருகனது திருவடிகளைப் பற்றி மனமுருக பூஜை செய்தும், மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜீவதயவை பெருக்கியும் வரவர முருகனது அருள் படிப்படியாக கூடி ஒரு கால பரியந்தத்தில் முருகனது அருளை, முருகனது தயவை முழுமையாகப் பெற்று உடம்பையும் உயிரையும் சேர்க்கின்ற இரகசியத்தை உணர்ந்து பெறமுடியாத ஒளிதேகத்தையும் முருகனருளால் உறுதியாக பெற்றுவிடலாம் என்பதையும் அறியலாம்.
……………..
நித்திய முருகனை நினைத்திட அன்றே
சத்தி அனைத்தும் தருவான் தடையற.
