News
MAY 2025

குரு உபதேசம் 4407
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞானவழிதனிலே வருகின்றவர்க்கு கொடுக்கப்பட்ட அறிவு, கல்வி பெற்றதேகம், செல்வம், வாய்ப்புகள், தக்க துணைகள் என அனைத்தும் உலக நன்மைக்கு பயன்படுத்த கொடுக்கப்பட்டதே தவிர தனிமனித விருப்புவெறுப்புகளுக்கு பயன்படுத்த அல்ல என்பதை புரிந்து கொள்வதோடு, பிறவியின் நோக்கம், உலகநலன் காப்பதும், தர்மத்தை காப்பதும், இனி பிறவா நிலை அடைவதும் என்பதை அறிந்து கொள்வதோடு பந்தபாசத்தினை, இல்லறத்தினை ஒரு எல்லையில் வைத்து பழகும் சிறப்பறிவையும் பெறுவான்.
உலகியல் தொடர்புகளை தனது தவ வாழ்விற்கு பயன்படுத்திக் கொள்வானே தவிர அவற்றிற்கு அடிமையாக மாட்டான், இறைவனது திருவடிக்கே கொத்தடிமையாகி தவமியற்றி பெறுதற்கரிய பெரும்பேறான பிறவாநிலையையும் அடைவான்.
உலகியல் சார்பு இல்லாமல் தவமியற்றல் இயலாது. ஆதலினாலே உலகியல் வாழ்வினிலே அவசியம் இருப்பதோடு அந்த உலகியல் வாழ்வின் மீது நாட்டம் கொள்ளாமல் இறைவனது திருவடிகளிலேயே நாட்டமாய் இருப்பார்கள்.
ஆதலின் உலகமாற்றம் நிகழ்த்திட முருகன் அருளை பெறுபவன், உலகியல் வாழ்வினை வெறுக்கவும் மாட்டான், விரும்பவும், மாட்டான். தனக்கு ஏற்பட்ட கடமையை செவ்வனே செய்வான். இவனே உலகமாற்றத்திற்கான உத்தம தொண்டன் என்பதையும் தெளிந்து முருகனது நாமங்களை மறவாமல் சொல்ல சொல்ல உலகமாற்றம் நிகழ்த்தும் வல்லமையையும் பெறலாம்.
……………..
உடம்போடு உயிரும் இரண்டற கலந்ததே
திடமான ஞானம் சேர்தற் பொருட்டே.
