News
MAY 2025

குரு உபதேசம் 4412
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான் தான், தாய்தந்தையால் எடுத்த இந்த காமதேகத்தில் சத்தும் அசத்தும் நரகமும் சொர்க்கமும் கலந்துள்ளதை பலகோடி யுகங்களாய் பாடுபட்டு தவமாய் தவமிருந்து உலக உயிர்கள்பால் அளவிலாத தயவு காட்டி தயவே வடிவானவனாக மாறி மகா தவசியாக விளங்கி ஆராய்ந்து ஆராய்ந்து கண்டு கொண்டான்.
காமதேகத்தினுள் உள்ள அசத்தை நீக்கி சத்தை நிலை நிறுத்தினால் எந்த தேகம் காமத்திற்கு காரணமாகி நம்மை அழிக்கின்றதோ அந்த காமதேகமே அசத்தை நீக்கினால் சத்து மிகையாகி தேகம் தூய்மைப் பெற்று நம்மை நிலையான என்றும் அழிவிலாத ஒளிதேகத்தை அளித்து பலபல கோடி கோடி யுகங்கள் ஆனாலும் அழியாத தேகத்தையும் உயிரும் உடலும் ஒன்றான ஒரு பெரும் வாய்ப்பையும் தந்து மரணமிலாப் பெருவாழ்வையும் நமக்கு அருள்வதையும் கோடியுகங்கள் பாடுபட்டு அறிந்து எந்த இயற்கை தாய் நம்மை வஞ்சித்தாளோ, அதே இயற்கை தாயின் துணையோடு அற்புதமான இரகசியமான வெகு நுட்பமான வேதியியல் முறைகளை அறிந்து சிறுக சிறுக சிறுக அணுஅணுவாக காமக்கசடுள்ள காமதேகத்தை மாற்றி மாற்றி இறுதியில் ஒரு நிலையில் முழுதும் அசத்து நீங்கிய சத்து மட்டுமே உள்ள தூய ஒளி உடம்பை பெற்றே விட்டான் முருகப்பெருமான்.
பெற்ற ஒளி உடம்பு தூய்மையாகி தூய்மையாகி சதகோடி சூரிய பிரகாசமுள்ளதாய் பல்கி பெருகி அற்புதமான அழிவற்ற தேகமாய் எல்லாம்வல்லதாய் ஆகி மரணமிலாப் பெருவாழ்வை அளிக்கும் தேகமாக மாறி என்றும் அழியாத நிலைபெற்ற தேகமாகி விட்டது.
இப்படி முருகப்பெருமான், தான் பலகோடியுகமாக பாடுபட்டு பாடுபட்டு பெற்ற இந்த அற்புதமான வழிமுறையை தாயினும் மிக்க கருணையுள்ளத்தோடு பிறரும் அறிய தமது மூத்த சீடனாம் அகத்தியனுக்கு கற்பித்து அகத்தியன் வழி நவகோடி சித்தரிஷி கணங்களை உருவாக்கியதோடு இனியும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறான் ஞானத்தலைவன் முருகப்பெருமான்.
அன்று அவன் கண்ட வழிமுறையே இப்பிரபஞ்சத்திலே வேறெங்கும் காணமுடியாததும் வழிவழி வந்த திருக்கூட்ட மரபினர் மட்டுமே அறிந்ததுமான இரகசியமானதுமான ‘ஞானம்’ என்பதாகும். அது உடம்பை பற்றி முழுதும் அறிந்து பெறுகின்றபடியினாலே அதுவே மெய்ஞானம் எனவும் ஆக்கினான் முருகப்பெருமான் என்பதையும் அறியலாம்.
அப்படிப்பட்ட ஒளி தேகத்தை நாமும் பெற விரும்பினால் மரணமிலாப் பெருவாழ்வை அடைய விரும்பினால், மெய்ஞானம் கைவரப் பெற விரும்பினால் ஞானத்திற்கு தலைவனான முருகப்பெருமானின் அருளைப் பெற்றாலன்றி ஒருபோதும் ஞானத்தைப் பற்றி அணுவளவும் அறிய முடியாது.
முருகனது அருளைப் பெற விரும்புகின்றோர் எக்காலத்தும் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணக் கூடாது. சுத்த சைவ உணவை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். தினம்தினம் மறவாமல் குறைந்தது காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ மனமுருகி பூஜைகள் செய்தும் மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வரவர, முருகனது அருள் நமக்கு கிடைக்க துவங்கி படிப்படியாக ஞானத்தின் சூட்சுமங்கள் எல்லாம் ஞானிகளால் உள்ளுணர்வாய் உணர்த்தப்பட்டு சொற்குருவின் தொடர்பும் கிடைக்கப்பெற்று சற்குரு தரிசனமும் கிடைத்து படிப்படியாக நிலை உயர்ந்து முருகனருளால் இறுதியில் ஞானமடைந்து மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம் என்பதையும் அறியலாம்.
ஆயினும் பொல்லா மாமாயை சூழ்ந்த இக்கலியுகத்தினிலே ஞானம் என்பதே அரிதாகிப் போய்விட்ட படியினால் எல்லாம்வல்ல முருகப்பெருமான் நேரில் அவதாரமாக தோன்றி, தவிக்கும் திருக்கூட்ட மரபின் வழிவந்த பண்பாளர்களை காப்பான் என்பதினாலேயும் கலியுகம் முடித்து ஞானயுகம் தோற்றுவித்து அவனே அவதாரமாகி சொற்குருவாயும் ஆகி அவனே சற்குருவாயும் ஆகி யாருக்கும் காணக் கிடைக்காத தனது திவ்ய ஜோதி ரூபம்தனை மக்களும் தரிசிக்க ஏதுவாக சொற்குரு வடிவினிலே ஒளிதேகம் உள்ளடக்கி பருதேகமாய் தோன்றி இவ்வுலகை ஒரு குடையின் கீழ் வழிநடத்தி சென்று அற்புதமாக ஞானலோகம் அமைப்பான்.
இன்று இக்கலி முடிக்க முருகப்பெருமானின் அவதாரமாக ஏழாம் படை வீடாம் துறையூர் ஓங்காரக்குடிலினிலே அமர்ந்து உலகை சன்மார்க்க வழியிலே வழிநடத்தும் மகா ஞானயோகியே அருள்மிகு ஆறுமுக அரங்கமகாதேசிகராவார். அவரே முருகனின் அவதாரம் என்பதையும் முருகப்பெருமானை பூஜிக்க பூஜிக்க அந்த முருகனே அவர் தமக்கு உணர்த்த உணர்வார்கள்.
ஏழாம் படை வீடாம் ஓங்காரக்குடிலை முழுமனதாக நம்பி வந்து அரங்கனே ஆறுமுகன் எனவும் ஆறுமுகனே அரங்கன் எனவும் நம்பிக்கையோடு வழிபட்டு வரவர ஞானத்தின் ரகசியம் அனைத்தும், குடிலே அவர்தமக்கு உணர்த்தும் என்பதையும் அறியலாம்.
……………..
சாதனை புரிந்திட்ட சற்குருநாதனை
சோதனை செய்திட துணிவோம் இன்றே.
