News
JUNE 2025

குரு உபதேசம் 4421
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்றும், மது அருந்துகின்றவன், சூதாடுகின்றவன் போன்றவர்களது நட்பு அமையாமல் நம்மை காப்பான். ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி என்று கூறி நாமஜெபம்தனை தொடர்ந்து செய்கின்றவர்களுக்கு நல்ல நட்பு அமையும், சொந்த வீடு அமையும், பண்புள்ள மனைவி, பிள்ளைகள் உண்டாகும், வறுமையில்லா வாழ்வினை வாழ்கின்ற அமைப்பையும் பெறுவார்கள். தொடர் பிறவிக்கு காரணம் அறியாமை என்றும், அறியாமைக்கு காரணம் மும்மலக் குற்றம்தான் என்பதையும், மும்மல குற்றத்தை வென்றால் அறியாமை நீங்கி சிறப்பறிவை பெறலாம் என்பதையும் அறிந்து முருகனருளால் அறியாமையை நீக்கிக் கொள்ள ஞானத்திற்குரிய அறிவும் அமையப் பெற்று மரணமிலாப் பெருவாழ்வையும் பெறுகின்ற வாய்ப்பையும் பெறலாம்.
ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பலப்பிரச்சனைகளும், நோயும், வறுமையும் இருக்கத்தான் செய்யும். அவர்கள் முருகப்பெருமானை வணங்கினால் நமக்கு உண்டான வறுமையும், நோயும், கடன்சுமையும், எதிர்பார்ப்புகள் நடக்காமல் போவதும், மனக்கவலையும் மற்றும் பலபல அநேக பிரச்சனைகளும் உண்டாவதற்கு காரணம் நாம் முன் ஜென்மங்களிலே செய்த பாவத்தினால்தான் இவ்வாறு ஏற்படுகிறது. இத்துன்பங்களுக்கு காரணம் நமது பாவங்களே அன்றி வேறொன்றும் இல்லை, வேறு யாரும் காரணம் இல்லை என்கிற உண்மை அறிவு உண்டாகி வருவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், தெளிவான அறிவும் உண்டாகும்.
துன்பம் தீர முருகப்பெருமானின் திருவடிகளே கதியென்று நம்பி எல்லா பாவங்களையும் பொடிபொடியாக்கும், முருகனது திருவடிகளிலே சரணடைவார்கள். அப்படியில்லாமல் ஏதேதோ மந்திரங்களை ஜெபிப்பதாலும் யந்திரங்களை பூஜிப்பதும் மனக்கவலை தீர பயிற்சிகளை மேற்கொள்வதும், பலபல இடங்களில் சுற்றித் திரிவதாலும் பல போலி ஆசாமிகளை அணுகி தீர்க்க முயற்சிப்பதும் வீணான முயற்சி என்பதையும் தெரிந்து கொள்வார்கள், முருகனது திருவடிகளை நம்பினோர். ஆதலினாலே முருகப்பெருமான் திருவடிகளை நம்பினோருக்கு எத்துன்பமும் வராது.
