News
JUNE 2025

குரு உபதேசம் 4427
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
இயற்கை சீற்றங்களினாலும், பல்வேறு வகையான இடையூறுகளினாலும், பாதிக்காமல் வாழவிரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து கடவுள் நம்பிக்கையோடு முருகனை வணங்க வணங்க இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்கலாம். இயற்கை கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களிலேயே மிகச் சிறந்த உயிரினம் மனிதர்களே. மனிதர்களும் மற்ற ஜீவராசிகளும் இயற்கைக் கடவுளால்தான் காப்பாற்றப்படுகிறோம் என்பதை அறியவில்லை. ஆயினும் இயற்கை நம்மை தோற்றுவிக்கும், காக்கும், அழித்துவிடும். ஆனால் இயற்கையை வென்ற முதுபெரும் தலைவன், இயற்கையோடு இயற்கையாக இரண்டற கலந்து எல்லா ஜீவரிடத்தும் விளங்குகின்ற பெருங்கருணை பெருந்தாய் முருகப்பெருமான் அருளினைப் பெற்றிட்டால் எல்லாம்வல்ல இயற்கையும், இயற்கை கடவுளும் வசப்பட்டு அழிவிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.
இயற்கையை நம் வசப்படுத்த வேண்டுமாயின் இயற்கையை வென்ற முருகனது அருளைப் பெற வேண்டும். முருகனது அருளைப் பெற வேண்டுமாயின் ஜீவதயவைப் பெற வேண்டும். ஜீவதயவே வடிவான முருகனது திருவடி பற்றி மனமுருகி வணங்க வணங்கத்தான் ஜீவதயவு நம்முள்தோன்றி இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த எண்ணம் வரும். எல்லா உயிர்களையும் தம்முயிராய் எண்ணி அன்பு செலுத்த செலுத்த உயிரினங்களின் மகிழ்ச்சியும் ஆசியாக மாறிட முருகன் மகிழ்வான், முருகன் மகிழ இயற்கையும் மகிழும். இயற்கை சாந்தமுற்று அமைதியாக நடந்து கொள்ளும் என்பதையும் அறியலாம்.
