தினம் ஒரு அகவல் 340
விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய் அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி – 340 விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய் அண்ணி வயங்கும் அருட்பெருஞ்ஜோதி ! வெளியின் உள்ளே அடங்கியுள்ள நுண்ணிய வெளியாகவும், அந்தப் பரந்த ஆகாயத்திற்கே ஆதாரமான மூல ஒளியாகவும் விளங்கி, எங்கும் நெருங்கிப் பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 338
விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய் அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி – 338 விண்ணினுள் விண்ணாய் விண் நடு விண்ணாய் அண்ணி நிறைந்த அருட்பெருஞ்ஜோதி ! அண்டவெளியின் உள்ளே மற்றொரு வெளியாக (ஆகாயமாக), அந்த வெளியின் மையத்திலும் (நடுவிலும்) ஜோதிச் சொரூபமாக, எங்கும் இடைவெளியின்றி நெருங்கிப் பூரணமாக நிறைந்திருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 336
உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி – 336 உலகெல்லாம் பரவ என்னுள்ளத்து இருந்தே அலகு இலா ஒளி செய் அருட்பெருஞ்ஜோதி ! உலக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்திப் புகழும்படி, என்னுடைய உள்ளத்திலேயே நிரந்தரமாக வீற்றிருந்து, அளவிட முடியாத ஞான சக்தியையும், ஒளியையும் என்னுள் வெளிப்படுத்திய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 334
அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி – 334 அருட்பேர் தரித்து உலகனைத்தும் மலர்ந்திட அருட் சீர் அளித்த அருட்பெருஞ்ஜோதி ! அருள் என்னும் பெருமைக்குரிய பெயரைச் சூட்டி, உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் மகிழ்ந்து மலர்ச்சி அடையுமாறு, அருளால் உண்டான அரிய சிறப்புகளையும் எனக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 332
விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி – 332 விருப்போடு இகலுறு வெறுப்பும் தவிர்த்தே அருட்பேறு அளித்த அருட்பெருஞ்ஜோதி உலகியல் பற்று (விருப்பு) மற்றும் அதனுடன் முரண்படும் வெறுப்பு ஆகிய இருவிதமான மன சலனங்களையும் நீக்கி, அருளை மட்டுமே நிரந்தரமான பெரும் பயனாக எனக்கு அளித்த அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 330
சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி – 330 சுருள் விரிவுடை மனச் சுழல் எலாம் அறுத்தே அருள் ஒளி நிரப்பிய அருட்பெருஞ்ஜோதி ! சுருங்குதல், விரிதல் என நிலையற்று அலைந்து திரியக்கூடிய மனதின் சலனங்கள் அனைத்தையும் நீக்கி, என்னுடைய உள்ளத்தில் அருள் என்னும் ஞான ஒளியை முழுவதுமாக நிரப்பியருளிய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 328
வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள் அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி – 328 வெருள் மனமாயை வினை இருள் நீக்கி உள் அருள் விளக்கு ஏற்றிய அருட்பெருஞ்ஜோதி ! அச்சம் கொள்ளும் மனதை சூழ்ந்திருந்த மாயை மற்றும் வினைப்பயனால் வந்த அறியாமை இருளை நீக்கி, என்னுடைய உள்ளத்தின் உள்ளே அருளையே வடிவமாகக் கொண்ட ஞான விளக்கை ஏற்றியருளிய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 326
உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி – 326 உருள் சகடாகிய உளம் சலியா வகை அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ்ஜோதி ! உருண்டு ஓடும் சக்கரத்தைப் போல நிலையற்று அலைந்து திரியக்கூடிய என்னுடைய மனம், இனிமேல் சோர்வடையாமல், அருள் நெறியாகிய ஒரே பாதையில் உறுதியாக நிலைபெறச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


