Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 80

80. நானந்த மில்லா நலம்பெற வெனக்கே ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி   நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி !   முடிவில்லாத நிலைத்த நற்பலன்களைப் பெறும்பொருட்டு, எனக்கு பேரானந்தத்தை அள்ளி வழங்கியருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 79

79. இறவா வரமளித் தென்னைமே லேற்றிய அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி   இறவா வரம் அளித்து என்னை மேலேற்றிய அறவாழியாம் தனி அருட்பெருஞ்ஜோதி !   அறவாழி (அறம் + ஆழி) – அறக்கடல் பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுபட்டு, சாகாவரம் அளித்து, என்னையும் உயர்ந்த ஞான நிலைக்கு உயர்த்தியருளியவரும், தனிச் சிறப்பு வாய்ந்த அறக் கடலாகவே (அறவாழி) விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 78

78. இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென் றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி   இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி !   உண்மையான நிலைத்த இன்பத்தை அளிக்கக்கூடிய சித்திகள் (ஆற்றல்கள்) அனைத்தையும் செய்து பயன்பெறலாம் என்று, பேரன்புடன் எனக்கு அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 77

77. காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும் ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி   காட்சியும் காணாக் காட்சியும் அது தரும் ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி !   இந்த உலகில் கண்களால் காணக்கூடிய பருப்பொருள்களின் வடிவமாகவும், கண்களால் காண முடியாத (ஆன்மா, உயிர்ச்சக்தி) சூட்சும வடிவமாகவும் இருந்து, ஆள்கின்ற அதிகாரமாக விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 76

76. பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய் அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி   பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி !   பெரியதிலும் பெரியதாகவும், சிறியதிலும் சிறியதாகவும் இருந்து, அடைவதற்கு அரிதான பொருள்களைக் காட்டிலும் மேலான, மிகமிக அரிதாய் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 75

75. முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி   முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி !   படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்யும் இறை வடிவங்களான பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகே°வரன், சதாசிவன் போன்றோருக்கு அந்த ஐந்து தொழில்களைச் செய்யும் அதிகாரத்தை அருளும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 74

74. சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும் அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி   சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும் அத்தகை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !   பிரபஞ்சத்தை இயக்கும் அனைத்து சக்தி வடிவங்களும் ஆக்கம் பெறவும், செழிக்கவும் உதவுவதற்காக, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து நின்று, அந்தப் பிரபஞ்ச ஆற்றலாகவே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 73

73. சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத் தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி   சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம் புறத்து அத்திசை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !   சத்தர்கள் – உண்மைப் பொருளை அறிந்த ஞானிகள். உண்மையைக் கண்டறிந்த ஞானிகள் அனைவரும் (சத்தர்கள்) ஆன்மீகத்தால் செழித்து வாழும்பொருட்டு, உள்ளம், உலகம் மற்றும் எல்லாத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 72

72. தாங்ககி லாண்ட சராசர நிலைநின் றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி   தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று ஆங்குற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி !   சரம் – இயங்குபவை   அசரம் – இயங்காதவை ஆங்குற – பொருந்துமாறு உலகங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கின்றவரும், இயங்கும் உயிர்களிலும் (சரம்), இயங்காத பொருள்களிலும் (அசரம்) நிலைபெற்று நின்று, அந்தந்தப் பொருள்களில் அதன் இயல்புக்கேற்பப் பொருந்தி விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!