admin
குரு உபதேசம் – 4195
முருகனை பூஜித்து ஆசிபெற்றிட: உயிர்களிடத்து செலுத்துகின்ற அன்பே பக்தியாக மாறும். அந்த பக்தியே இறைவனிடத்து ஆசிபெற உறுதுணையாய் வரும் என்பதையும் அறியலாம். மாசற்ற மணிவாசகன் திருவடியை ஆசற்றார் போற்றியே அகம் மகிழ்வர். கனிவுடைய மணிவாசகன் கழலிணை போற்றிட பணிவான வாழ்வும் பண்பும் உண்டாம். வாட்டமற்ற மணிவாசகன் வழங்கிய வாசகத்தை நாட்டமுற்று படித்திட நலமாம் சித்தியே கல்லும் கனியும் கனிவான வாசகத்தை அல்லும் பகலும் அருளாளரே போற்றுவர்.
குரு உபதேசம் – 4194
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றால்: மும்மலமாகிய சிறையை உடைத்து மும்மலச்சிறையில் அடைப்பட்ட ஆன்மாவை விடுவித்து சித்தி பெறலாம் என்பதும், அந்த மும்மலச் சிறையை உடைத்தெறியும் வல்லவன் முருகனே என்றும் முருகப்பெருமானால்தான் மும்மலச் சிறையை உடைத்து சிறைப்பட்ட ஆன்மாவை விடுவித்து கடைத்தேற்ற முடியுமென்றும் அறியலாம்.
குரு உபதேசம் – 4193
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: வாசிக்கு தலைவன் முருகப்பெருமான் தான் என்பதை அறியலாம். அச்சம் தவிர்த்தருளும் அருளாளன் முருகனையே நிச்சயமாக நினைத்திடல் நலமே சத்து அறிந்த முருகனின் தாளிணை போற்றிட சித்து அனைத்தும் திடமாம் சித்தியே.
குரு உபதேசம் – 4192
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து உண்பதே உண்மையான சைவம் என்று அறியலாம். வீடுபேறு அருளும் வேலவன் திருவடியை நாடியே போற்றிட நன்மை உண்டாம். கற்றறிந்த முருகனின் கழலிணை போற்றிட கற்றறிந்தார் கற்ற கல்வியின் பயனே. கல்வியின் பயனே கழலிணை பணிதல்.
குரு உபதேசம் – 4191
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: முனிவர்களுக்கெல்லாம் தலைவன் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற அறிவை பெறலாம். நற்றவ முருகனை நாளும் போற்றிட உற்ற தவமது ஓதி உணர்வீர். ஆற்றலாம் முருகனின் அருளைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.
குரு உபதேசம் – 4190
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட: காமதேகத்தின் கசடுகளை நீக்கவும், சிறப்பறிவு பெறவும் முருகப்பெருமான்தான் அருள்செய்வான் என்பதை அறியலாம். பயனுடைய முருகனின் பாதம் பணிந்திட நயனுடைய வாழ்வும் நல்கும் முக்தியே. கருணையே வடிவான கந்தனைப் போற்றிட வருணனும் வந்து வழங்குவான் மழையே. சத்தியவான் முருகனின் தாளைப் போற்றிட நித்திய வாழ்வும் நிலைக்கும் முக்தியே. பரிவுடைய முருகனின் பாதம் போற்றிட செறிவுடைய வாழ்வும் சித்திக்கும் முக்தியே.
குரு உபதேசம் – 4189
முருகப்பெருமானை வணங்கிட: ஒருவனது செயல் மற்ற உயிர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்குமேயானால் அதுவே பிறவித் துன்பத்தை ஒழிக்கும் என்பதை அறியலாம். முக்திக்கு தலைவன் முருகனென்றே அறிந்தபின் பக்தி செலுத்தி பயன்பெறுதல் நலமே!
குரு உபதேசம் – 4188
முருகனை வணங்கிட: மும்மலக் குற்றத்தாலான தேகமே தொடர் பிறவிக்கு காரணமாய் உள்ளதை அறிந்து முதன் முதலில் மும்மலக்குற்றத்தை நீக்கிக் கொண்டு ஒளிதேகம் பெற்றவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட குற்றமற்ற வாழ்வும் நற்குணமும் உண்டாம்.


