admin
தினம் ஒரு அகவல் 55
55. இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங் கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி இன்புறு நான் உளத்து எண்ணி ஆங்கு எண்ணி ஆங்கு அன்புறத் தருசபை அருட்பெருஞ்ஜோதி ! இன்பமயமான (துன்பம் நீங்கிய) நான் என் உள்ளத்தில் எதை நினைக்கின்றேனோ, அதை மீண்டும் மீண்டும் நினைக்கும் போதெல்லாம், கருணையோடு அருளைத் தருகின்ற சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 54
54. ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி ஈன்ற நல் தாயினும் இனிய பெருந்தயவு ஆன்ற சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி ! ஆன்ற – நிறைவடைந்த உயிரைப் பெற்றெடுத்த நல்ல தாயை விடவும், பேரன்பு கொண்டதாய்த் திகழ்கின்றவரும், நிறைவடைந்த ஞானச் சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 53
53. கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர் அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி கற்பனை முழுவதும் கடந்த ஒளிதரும் ஓர் அற்புதச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி ! கற்பனைக்கு அப்பாற்பட்டதும், சுட்டிக் காட்ட முடியாத எல்லைகளை கடந்து தாண்டி நிற்கின்றதும், தன்னைத் தானே வெளிப்படுத்திக் கருணை ஒளியை வழங்குகின்றவரும், அதிசயங்கள் நிறைந்த ஞானமயமான சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 52
52. நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி நாடகத் திருச் செயல் நவிற்றிடும் ஒரு பேர் ஆடக பொது ஒளிர் அருட்பெருஞ்ஜோதி ! நவிற்றல் – நடத்துவது. ஆடகம் – பொன் உலகத்தின் படைப்பு, காப்பு, அழிவு போன்ற திருவிளையாடல்கள் எனும் நாடகத்தை நடத்திக் காட்டுகின்றவரே! ஒப்பற்றவரே! பொன்னால் ஆன பொதுச் சபையில் (சிற்சபையில்) ஒளிவீசுகின்ற அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 51
51. வாடுத னீக்கிய மணிமன் றிடையே ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி வாடுதல் நீக்கிய மணி மன்றின் இடையே ஆடுதல் வல்ல அருட்பெருஞ்ஜோதி ! உடலுக்கும் உயிருக்கும் ஏற்படும் எல்லாவிதமான வாட்டங்களையும், துன்பங்களையும் முற்றிலுமாக நீக்கியருளி, அழகிய திருச்சபையின் நடுவே ஆனந்தமாக நடனமாட வல்லமை கொண்ட அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 50
50. எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள் அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடம் கொளும் அருட்பெருஞ்ஜோதி ! எந்தச் சபையை (பிரபஞ்சம்) யாவருக்கும் பொதுவானது என்று ஞானிகள் வரையறுத்துச் சொன்னார்களோ, அந்தச் சபையையே நிரந்தர இருப்பிடமாகக் கொண்டுள்ள அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 49
49. தம்பர ஞான சிதம்பர மெனுமோர் அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி தம் பரஞான சிதம்பரம் எனும் ஓர் அம்பரத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி ! அம்பரம் – பரவெளி தம்பரம் – தனது மேலான சிதம்பரம் – சித் + அம்பரம் தனக்குரிய மேலான ஞானத்தினால் நிரம்பி, சிதம்பரம் என்று போற்றப்படும் ஒப்பற்ற ஞான வெளியில் உயர்ந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!


