admin
தினம் ஒரு அகவல் 318
உருவமு மருவமு முபயமு மாகிய அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி – 318 உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள் நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி ! வடிவம் (உருவம்), வடிவம் இல்லாமை (அருவம்), இரண்டும் கலந்த வடிவம் (உபயம் – உருவ அருவம்) ஆகிய முப்பரிமாணங்களையும் கடந்து நிற்கும் இறைவனின் அருள் நிலையின் (ஜோதி சொரூபத்தின்) உண்மையை எனக்குத் தெளிவாக வெளிப்படுத்திய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 316
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி – 316 மருட் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே அருட்குருவாகிய அருட்பெருஞ்ஜோதி ! மாயை (மருள்) என்னும் பகையை என்னிடமிருந்து நீக்கி, என்னை நித்திய வாழ்வு வாழச் செய்து, எனக்கே அருளை உபதேசித்து ஞானகுருவாக மாறி வந்த அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 314
தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – 314 தாபத்துயரம் தவிர்த்து உலகுறும் எல்லா ஆபத்தும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி ! தாபத்துயரம் – ஏக்கம் / வெப்பத்துன்பம் தவ வெப்பத்தால் தேகத்தில் ஏற்படும் துன்பமான சூட்டையும், ஆன்மக் கொதிப்பையும் நீக்கி, இந்த உலகத்தில் ஏற்படும் எல்லாவிதமான துன்பங்கள், பிணிகள் மற்றும் ஆபத்துகளையும் விலக்கி அருளிய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 312
ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண் டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி – 312 ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு ஆறாறு கடத்திய அருட்பெருஞ்ஜோதி ! மனித முயற்சிகளால் எளிதில் அடைய முடியாத உயர்ந்த நடுநிலைப் பகுதியில் என்னை ஏற்றி, முப்பத்தாறு (ஆறாறு) தத்துவங்களைக் கடந்து சென்று, நித்திய நிலையை அடையச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 310
எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 310 எச்சோதனைகளும் இயற்றாது எனக்கே அச்சோ என்று அருள் அருட்பெருஞ்ஜோதி ! எந்தவிதமான கடுமையான சோதனைகளையும், ஆன்மீகப் பரீட்சைகளையும் செய்யாமல், ‘ஆச்சரியமே!’ என்றோ “அய்யோ பாவம்” என்றோ, அருள் வழங்கிய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 308
தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன் ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி – 308 தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன் ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி ! ஆத்திரம் – ஆ + திரம் – வியந்திடும் வல்லபம் உன்னை வணங்கி உன்னுடைய புகழைச் சொல்லத் தெரியாதவனாகவும், உனது அருளைப் பெறுவதற்கு தகுந்த பாத்திரமாக இல்லாதவனாகவும் இருந்த என்னிடத்தில், மிகுந்த ஆன்மீக வல்லபத்தையும், ஆர்வத்தையும் அளித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 306
நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன் ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி – 306 நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி ! நாயை விட, மலத்தில் இருக்கும் ஈயைவிட, இழிவாக நான் இருப்பினும் எனக்கு அருள் செய்த அருட்பெருஞ்ஜோதி !
தினம் ஒரு அகவல் 304
நன்றறி வறியா நாயினேன் றனையும் அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி – 304 நன்று அறிவு அறியா நாயினேன் என்றனையும் அன்று வந்து ஆண்ட அருட்பெருஞ்ஜோதி ! நன்மை எது என்று அறிந்துகொள்ளும் ஞானம் கூட இல்லாத நாயைப் போன்றவனான என்னையும் கூட, அந்நாளிலேயே தேடி வந்து ஆட்கொண்டு அருள் செய்த அருட்பெருஞ்ஜோதியே!


