admin
தினம் ஒரு அகவல் 14
14. திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர் அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும்ஓர் அருள்வெளிப் பதி வளர் அருட்பெருஞ்ஜோதி ! ஒப்பற்ற சுத்த பெருவெளியான இறைவன் வியாபித்துள்ள பரவெளியே திருநிலையாகிய தனிவெளியாகும். இதுவே அழிவில்லாத நித்திய இன்பம் நிலைத்துள்ள சிவ வெளியாகும். உயிர் எழுத்துகளின் வரிசையில் கடைசியாக ஆயுத எழுத்தான “ஃ” என்பதை திருநிலை என்று ஆசான் குறிப்பிடுகிறார். அகாரமாகிய இடகலையும் உகாரமாகிய பிங்கலையும் மகாரமாகிய புருவமத்தியில் சேர்வதே திருநிலையாகும். அங்கு … Read more
தினம் ஒரு அகவல் 13
13.ஒளவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர் அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி ஒளவியம் ஆதியோர் ஆறும் தவிர்த்த பேர் அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி ! மனிதர்களின் ஆன்மீக வாழ்க்கைக்கும், இறைவனை அடைவதற்கும் தடையாக உள்ள பொறாமை முதலான ஆறு குணக்கேடுகளை (பொறாமை, காமம், குரோதம், லோபித்தனம், மோகம், மதம்) நீக்கி உள்ளம் தூய்மையாக இருப்பவர்களால்தான், பேரொளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர்ந்து துதிக்க முடியும்.
தினம் ஒரு அகவல் 12
12. ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி ! யாரிடமும் கல்வி கற்காமல், எந்த நூல்களையும் படிக்க வேண்டிய அவசியமில்லாமல் எனக்கு பேரொளியான ஞானத்தை கொடுத்து நிலைபெறச் செய்த அருட்பெருஞ்ஜோதியே !
தினம் ஒரு அகவல் 11
11. ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி ஒன்று என இரண்டு என ஒன்றிரண்டு என இவை அன்று என விளங்கிய அருட்பெருஞ்ஜோதி ! இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள எவ்வித தத்துவங்களிலும் அடக்க முடியாமல் தனித்து பிரகாசிக்கும் அருட்பெருஞ்ஜோதியே !
தினம் ஒரு அகவல் 10
10. ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள் ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள் ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி ஆன்ம குழப்பமான சந்தேகங்களையும், மயக்கத்தையும் மற்றும் பசி, தாகம், பிணி, நோய், முதுமை, அச்சம் போன்ற ஐந்துவகையான உடல் துன்பங்களையும் முற்றிலும் நீக்கி பூரணத்தை அருளியவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
தினம் ஒரு அகவல் 09
9. ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி ஏறா நிலை மிசை ஏற்றி என்றனக்கே ஆறாறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி ! மனிதர்களால் ஏற முடியாத உயர்ந்த ஞான நிலையில் என்னை ஏற்றி முப்பத்தாறு தத்துவங்களின் அமைப்பையும் இயக்கத்தையும் எனக்கு தெளிவாக காட்டித் தந்த அருட்பெருஞ்ஜோதியே ! 36 தத்துவங்கள் ஆன்ம தத்துவங்கள் – 24 வித்யா தத்துவங்கள் – 7 சிவ தத்துவங்கள் – 5
தினம் ஒரு அகவல் 08
8. எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென் அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி எல்லை இல் பிறப்பு எனும் இருங்கடல் கடத்தி என் அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி ! எல்லையே இல்லாத பிறவிகள் என்னும் இருண்ட மாபெரும் கடலை நான் கடந்து செல்ல என்னுடைய துன்பங்கள் அனைத்தையும் முற்றிலும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதியே !
தினம் ஒரு அகவல் 07
7. ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும் ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி ஊக்கமும் உணர்ச்சியும் ஒளி தரும் ஆக்கையும் ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி ! தவத்திற்கான ஊக்கத்தையும், உண்மையான ஆன்ம உணர்ச்சியையும் கொடுத்து நிலையான ஒளி தேகத்தை தர வல்லவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.


